தொண்டையில் நூடுல்ஸ் சிக்கி 8 வயது சிறுமி பரிதாப பலி.. கேரளாவில் அதிர்ச்சி!

 

கேரளாவில் நூடுல்ஸ் சாப்பிட்ட 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோஜன். இவரது மனைவி ஜினா. இவர்களது மகள் ஜோவானா (8). இவள் கூம்பன்பாறையில் உள்ள பாத்திமா மாதா பெண்கள் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஞயிற்றுக்கிழமை இரவு ஜோவானா, தனது வீட்டில் நூடுல்ஸ் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

அப்போது தொண்டையில் உணவு சிக்கிக்கொண்டதில் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்த அவளை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக அடிமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஜோவானா நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு பரிதாபமாக இறந்தாள். இதுகுறித்து அடிமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உணவு சிறுமியின் தொண்டை அல்லது மூச்சுக் குழாயில் சிக்கி, காற்றோட்டத்தைத் தடுத்து மரணத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறது.

இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சரியான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.