பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 77 மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம்!! மருத்துவமனையில் அனுமதி

 

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் பரமசாகரா அருகே உள்ள இசாமுத்ரா கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நேற்று முன்தினம் மதியம் மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறப்பட்டது. அப்போது சத்துணவு சாப்பிட்ட 120 மாணவர்களில் 77 பேருக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், 77 மாணவர்களையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பரமசாகரா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக தாவணகெரே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த பரமசாகரா தொகுதி எம்.எல்.ஏ. சந்திரப்பா மற்றும் மாவட்ட ஆட்சியர் கவிதா மன்னிக்கேரி மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மாணவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகள், அரசு பள்ளிக்கு விரைந்து சென்று சமையல் கூடத்தில் இருந்த உணவு மாதிரியை எடுத்து சோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் என்ன காரணத்திற்காக மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு என்பது தெரியவில்லை.

பள்ளியில் மதிய சத்துணவு சாப்பிட்ட 77 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.