ஒடிசாவில் 2 மணிநேரத்தில் 61 ஆயிரம் மின்னல்கள்.. 12 பேர் உடல் கருகி பலி!

 

ஒடிசாவில் மின்னல் தாக்கி 12 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

ஒடிசா மாநிலம் முழுவதும் சனிக்கிழமையன்று 61,000 மின்னல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயம் அடைந்திருக்கிறார்கள் ஒடிசா சிறப்பு நிவாரண ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். இந்திய வானிலை மையம், செப்டம்பர் 7-ம் தேதி வரை ஒடிசா மாநிலம் முழுவதும் தீவிரமான வானிலை இருக்கும் என்று எச்சரித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறும் என்றும், அதன் தாக்கத்தால், ஒடிசா முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. “வாரத்தின் பிற்பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் 7 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை மையம் மேலும் கூறியுள்ளது.

உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒடிசா அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹு கூறினார்.