டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோகம்.. கொசுவர்த்தி புகையால் நேர்ந்த விபரீதம்!!

 

டெல்லியில் கொசுவர்த்தி சுருளில் இருந்து எழுந்த புகையை சுவாசித்ததால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பூங்கா அருகே வசிக்கும் குடும்பத்தினர், நேற்று இரவு கொசுவர்த்தியின் சுருளை ஏற்றிவைத்து தூங்கியுள்ளனர். அப்போது கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததில் தீப்பற்றி அறை முழுவதும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். 

எனினும், சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் நடத்திய விசாரணையில், இரவில் கொசுவர்த்தி சுருளை கொளுத்தி வைத்துவிட்டு உறங்கியதும், அது தவறி விழுந்து மெத்தையில் தீப்பற்றியதும் தெரியவந்துள்ளது.

மேலும், அறையின் கதவு அடைக்கப்பட்டிருந்ததால், அறையை சூழ்ந்த அதிகப்படியான கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் மயங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தூக்கத்தில் இந்த நச்சு வாயுவை சுவாசித்த 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒன்றரை வயது குழந்தை உள்ளிட்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.