கூட்ட நெரிசலில் தவறி விழுந்த 5 வயது சிறுமி.. தேர் சக்கரம் ஏறி உயிரிழந்த சோகம்!

 

கேரளாவில் சமயவிளக்கு திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 5 வயது சிறுமி தேர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கோட்டங்குளங்கர ஸ்ரீதேவி கோயிலில், பாரம்பரியமிக்க ’சமய விளக்குத் திருவிழா’ நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்களே புருவத்தை உயர்த்தும் அளவுக்கு பெண் வேடமிட்டிருந்தனர். சிகை அலங்காரம், ஆடை அலங்காரம், ஒப்பனை என பெண்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆண்கள் வேடமிட்டு வந்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு இந்த திருவிழாவுக்கு ராமேசன் என்பவர், தனது மனைவி ஜிஜி மற்றும் மகள் ஷேத்ராவுடன் (5) வந்திருந்தனர். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ராமேசன் கையில் இருந்த ஷேத்ரா தவறி கீழே விழுந்தார். அப்போது விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த தேர், குழந்தையின் மீது ஏறியது.

இதில், படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆயினும் குழந்தை ஷேத்ரா பரிதாமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சவாரா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில், கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 மாணவர்கள் பலியானதுடன் 60 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.