வாந்தி மயக்கம் ஏற்பட்டு 5 வயது சிறுமி பரிதாப பலி.. ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் விபரீதம்!

 

கேரளாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமிக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியைச் சேர்ந்தவர் சிஜோ. இவரது 5 வயது மகள் ஆர்யா என்பவர் 2 நாட்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் வெளியே சென்று இருந்தார். அப்போது ஐஸ்கிரீம் கேட்டு சிறுமி அடம் பிடித்ததால், அவரது தாத்தாவும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுமிக்கு, திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை சற்றே தேறி உள்ளது. இதனால் அவரை வீட்டு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி ஆர்யா, சில மணி நேரங்களில் மீண்டும் தொடர்ந்து வாந்தி எடுக்கத் துவங்கினார். இதனால் அவரை மீண்டும் அதே மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது அவரை பீர்மேடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சிறுமி வாந்தி ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.