கர்நாடகாவில் சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயம்.. ஒருவர் கவலைக்கிடம்!

 

கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 5 பேர் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பொம்மனஹள்ளி அருகே உள்ள கார்வேபாவி பாளைய லட்சுமி லே அவுட்  7வது கிராஸில் வசித்து வருபவர் சுப்ரமணி. இவரது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த சந்தேஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு அவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை சந்தேஷ் குடும்பத்தினர் கவனிக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் சமையலறை விளக்கைப் போட்ட போது, சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கரமாக வெடித்தது. இதில் சந்தேஷ் உள்பட அவரது குடும்பத்தினர் ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். சாலையில் சென்ற மாடும் இந்த சிலிண்டர் வெடிப்பில் காயமடைந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் சந்தேஷ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தகலின் பேரில் பேகூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.