அடுத்தடுத்து 4 முறை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்!

 

அந்தமான் நிகோபார் தீவு பகுதியில் அடுத்தடுத்து கடலுக்கு அடியே ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துருக்கி நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அண்டை நாடான சிரியாவிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். இதை தொடர்ந்து உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டு வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், அந்தமான் நிகோபார் பகுதியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படி கொஞ்ச நேர இடைவெளியில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கம் கடலுக்கு அடியே ஏற்பட்டதால் மக்கள் பதற்றமடைந்துள்ளனர். ரிக்டர் அளவில் 4.9, 4.1, 5.3, 5.5 எனத் தொடர்ச்சியாக 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகலில் சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம் மதியம் 1 மணியளவிலும் அதைத் தொடர்ந்து சற்று நேரத்தில் அடுத்த 3 பூகம்பங்களும் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவான முதல் நிலநடுக்கம் 1.16 மணியளவில் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 2.59 மணியளவில் 4.1 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து, 5.3 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் 4.01 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இறுதியாக 5.5 ரிக்டரில் மற்றொரு நிலநடுக்கம் 5.47 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதுவரை சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாகப் பொதுமக்கள் அஞ்சினர். கட்டிடங்கள் தொடர்ச்சியாகக் குலுங்கியதால், பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.