ஆழ்துளையில் சிக்கிய 3 வயது குழந்தை.. 5 மணி நேரப் போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்பு! வைரல் வீடியோ

 

பிகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் குல் கிராமத்தை சேர்ந்த பெண் தனது 3 வயது குழந்தை சிவம் என்பவருடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்தில் அந்த பெண் வேலை செய்து கொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில், தோட்டத்தில் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு வெட்டப்பட்டிருந்த ஆள்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. தன் குழந்தை ஆள்துறை கிணற்றுக்குள் விழுந்ததை கண்ட தாயார் அதிர்ச்சியடைந்து கிராமத்தினரை அழைத்துள்ளார். உடனடியாக, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும்பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். இதையடுத்து சிலிண்டர் மூலம் ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தைக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டது.


பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அருகே பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று, ஐந்து மணி நேரப் போராட்டத்துக்கு பின் குழந்தை மீட்கப்பட்டது. தற்போது சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உயர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.