ஒடிசாவில் 28 வயது இளைஞர் திடீர் மரணம்.. கிரிக்கெட் விளையாடியபோது உயிரிழந்த சோகம்!

 

ஒடிசாவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைசிங்கா காவல் நிலையத்திற்கு உட்பட்ட மனாத்ரி பகுதியைச் சேர்ந்தவர் பிகாஷ் கர் (28). இவர், அங்குள்ள மனாத்ரி மினி ஸ்டேடியத்தில், நேற்று சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராவிதமாகக் கீழே விழுந்துள்ளார். இதனால், அவருடன் விளையாடியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய மரணத்திற்கான பின்னணி குறித்து உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்தபிறகே, அவருடைய மரணம் குறித்து முழுத் தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 10-ம் தேதி, இதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ இணைத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.