வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்... கர்நாடகாவில் காங்கிரஸ் வாக்குறுதி!!

 

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

அதேபோல் இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சி அரியனையில் அமர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. இதேபோல் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் செயல்பட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பஸ் யாத்திரையை இன்று தொடங்கினர். முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் தலைமையில் ‘பிரஜா த்வனி யாத்ரா’ எனும் பஸ் யாத்திரை இன்று துவங்கியது.

இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் டிகே சிவக்குமார் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது டிகே சிவக்குமார் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். தேர்தலில் முதல் வாக்குறுதியாக இதனை தெரிவித்து வருகிறோம். பாஜக அரசு 10 மணிநேரத்துக்கு இலவச மும்முனை மின்சாரம் வழங்குவதாக அறிவித்தது. அதனை செய்ததா? என்றால் கேள்விக்குறி தான். கடந்த முறை நாங்கள் 7 மணிநேரத்துக்கு இலவச மின்சாரம் வழங்கினோம்” என்றார்.