200 இடத்தில் கடித்த 20 தெரு நாய்கள்... 3 வயது சிறுமி துடிதுடித்து பலியான சோகம்!! 

 

உத்தரபிரதேசத்தில் 3 வயது குழந்தையை 20 நாய்கள் கடித்து குதறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி சிபி கஞ்ச் பகுதியில் பாண்டியா கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் கங்கா. இவரது மகள் பாரி (3). இவர் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை கடித்தது. சுமார் 20 நாய்கள் சிறுமியை சூழ்ந்து கொண்டு கடித்துள்ளது. 

சிறுமியை நாய்கள் சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் சென்று மாறி மாறி கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்து வந்த சிறுமியின் சகோதரர்கள் நாய்களை அடித்து விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த நாய்கள் சிறுமியின் சகோதரரையும் கடித்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

மேலும், அந்த சிறுமியின் உடலில் 200-க்கும் மேற்பட்ட நாய் கடி இருந்ததாக தெரிவித்தனர். சிறுமியின் சகோதரர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. நாய் கடித்து 3 வயது சிறுமி துடிதுடித்து இறந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தெலங்கானாவில் 7 வயது சிறுவனை தெரு நாய்கள் கூட்டம் கடித்து கொலை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்தது.