ஒரே நாளில் அடுத்தடுத்து 18 நோயாளிகள் பலி.. மகாராஷ்டிரா அரசு மருத்தவமனையில் நடந்தது என்ன?

 

மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனை ஒன்றில் அடுத்தடுத்து 18 உள் நோயாளிகள் உயிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்த உள்ளதாகவும், நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஜித்தேந்திர அவாத் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்த நிலையில், அந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் முதியவர்கள் எனவும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

நோயாளிகள் உயிரிழப்பு குறித்து தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கர் கூறுகையில், கல்வா மருத்துவமனையில் உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள், 8 பேர் ஆண்கள். இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே விசாரித்தார். அவர் நோயாளிகள் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த சுகாதாரத்துறை கமிஷனர் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இது சாதாரண விஷயமல்ல. அது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று கூறினார். கல்வா மாநகராட்சி மருத்துவமனையில் ஒரே நாளில் 18 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக சாடி உள்ளார்.