மாரடைப்பால் 13 வயது சிறுமி பரிதாப பலி.. கதறித் துடித்த பெற்றோர்..!

 

கர்நாடகாவில் 7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனா. இவரது மனைவி சுமா. இந்த தம்பதியின் மகள் சிருஷ்டி (13). இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம் போல் மாணவி சிருஷ்டி பள்ளிக்கூடத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சிருஷ்டியை மீட்டு எம்.ஜி.எம். மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்துபோனதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்திருந்தால், மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறினர். மாரடைப்பால் 7-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.