மாரடைப்பு ஏற்பட்டு 12 வயது சிறுவன் பரிதாப பலி.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 

குஜராத்தில் 12 வயது பள்ளி மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தின் விஜாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுவன் துஷ்யந்த் பிப்ரோதர் (12). இவர், அதே கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியிஃல 6-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை சிறுவனின் தாய் வழக்கம்போல் தனது வேலைகள் செய்யத் தொடங்குவதற்காகப் படுக்கையில் இருந்து எழுந்துள்ளார்.

அப்போது வீட்டின் முற்றத்தில் மகன் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே பெற்றோர்கள் மகனைத் தூக்கிக் கொண்டு அருகே உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

மேலும் சிறுவன் இறப்பிற்கு மாரடைப்பு காரணம் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சிறிய வயதில் எப்படி மாரடைப்பு வந்தது என்று தெரியாமல் சிறுவனின் பெற்றோர் வேதனையுடன் இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

துஷ்யந்தின் திடீர் மரணத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினோம் என விஜாப்பூர் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்தார். கிராம மக்கள் அனைவரும் துஷ்யந்தின் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்.