மாணவிகள் கழிவறையில் ரகசிய கேமரா... பிடிப்பட்ட மாணவர் செல்போனில் 1,200 வீடியோக்கள்..!

 

கர்நாடகாவில் மாணவிகள் கழிப்பறையை எட்டிப்பார்த்த மாணவனிடம் போலீசார் விசாரித்தபோது அவனது செல்போனில் அது தொடர்பான 1,200 ஆபாச வீடியோக்கள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒசகெரேஹள்ளி பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள கழிவறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவிகள் சென்று இருந்தனர். அப்போது மாணவிகளின் கழிவறையில் ஒரு வாலிபர் நின்றார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கூச்சலிட்டனர். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கிரிநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறைக்குள் இருந்து ஓடியது அதே கல்லூரியில் படித்து வரும் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. மாணவரான சுபம் ஆசாத் என்பது தெரியவந்தது. 

இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவிகளின் கழிவறையில் சுபம் ஆசாத் ரகசிய கேமரா பொருத்தியதும், அந்த ரகசிய கேமரா மூலம் மாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. 

இதனால் அந்த கல்லூரிக்கு சென்ற போலீசார் ரகசிய கேமராவை பறிமுதல் செய்தனர். மேலும் சுபம் ஆசாத்தின் செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது செல்போனில் 1,200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் இருந்தன. இதுகுறித்து சுபம் ஆசாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

கைதான சுபம் ஆசாத் மீது கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கைதான சுபம் ஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்லூரியில் ரகசிய கேமரா பொருத்தி இருந்தார். அப்போது அவர் கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டதால் அவர் மீது புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.