தேர்வு முடிவு வரும்போது விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்.. 10 பேருக்கு உடல் உறுப்பு தானம்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்!!

 

கேரளாவில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வரும்போது விபத்தில் சிக்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார். இவரது மனைவி ரஜினி. இந்த தம்பதியின் மகன் சாரங். இவர், திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சாரங்க், அவரது தாயுடன் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் பயணித்தபோது திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியுள்ளார். 

இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். உயிரிழந்த சாரங்கின் உடல் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்து. சாரங்கின் சடலத்திற்கு சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். 

சாரங்கின் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தும்போது, 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. சாரங்க், அனைத்துப் பாடத்திலும் ஏ பிளஸ் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்னதாக சாரங்க் உயிரிழந்திருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் சாரங்கின் உடல் உறுப்புகள் 10 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது பலரையும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

சாரங்கின் கண்கள், கல்லீரல் மற்றும் இதய மஜ்ஜை போன்ற உறுப்புகளை 10 பேருக்கு தானம் செய்ய சாரங்கின் பெற்றோர் சம்மதித்தனர். அதனையடுத்து, கோட்டயம் பகுதியைச்     சேர்ந்த குழந்தைக்காக சாரங்கின் இதயம் வழங்கப்பட்டது. இது போன்று 10 பேருக்கு புது வாழ்வு அளித்து உயிர் நீர்த்தது குறிப்பிடத்தக்கது.