100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு.. ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு!

 

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது.

இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 6 கோடிக்கும் மேற்பட்டகுடும்பங்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றன. இதில் இணையும் பணியாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் அந்தத் திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்பட்டு அதற்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் பணியாளருக்கான ஊதிய விகிதத்தை ஒன்றிய அமைச்சகம் தொழிலாளர்கள் ஊதிய சட்டம் பிரிவு 6(சி)-ன் கீழ் அவ்வப்போது நிர்ணயம் செய்து வருகிறது.

இந்த நிலையில் 100 நாள் வேலைக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான அரசாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 100 நாள் வேலைக்கான ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளொன்றுக்கு தற்போது ரூ.294 வழங்கப்படும் நிலையில் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

புதிய ஊதிய விவரங்களின்படி அதிகபட்சமாக அரியானா, சிக்கிம் மாநிலங்களில் ரூ.374 ஆக உயர்ந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.