பெண்கள் மந்திரிகளாக தேவையில்லை... குழந்தைகளை பெற்றெடுத்தால் போதும்! தாலிபான் அதிரடி

 
Sayed-Zekrullah-Hashimi

பெண்கள் மந்திரிகளாக முடியாது, குழந்தைகளை பெற்றெடுப்பதே அவர்கள் வேலை என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் வசம் சென்றது.

தற்போது, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான்கள் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் முழுவதும் மறுக்கபட்டு வருகிறது. தாலிபான்களின் ஆட்சியில் பெண்கள் யாருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கல்வி கற்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கபட்டுள்ளது. இதனால், தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெண்கள் மந்திரிகளாக முடியாது என தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷீமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சையது கூறுகையில், “பெண்கள் மந்திரிகளாக முடியாது. மந்திரியாவது என்பது பெண்களுக்கு அவர்களின் கழுத்தில் சுமக்க முடியாத ஒன்றை வைப்பது போன்றதாகும்.

பெண்கள் மந்திரி சபையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து பெண்களின் பிரதிநிதிகளாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

From around the web