ஃபேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

 
Joe-Biden

ஃபேஸ்புக்கில் பரவும் கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.‌ எனினும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.

அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

கொரோனா குறித்தும், அதன் தடுப்பூசி குறித்தும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்களே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் அமெரிக்க அரசு, தவறான தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடனிடம் தடுப்பூசிகள் மற்றும் தொற்று நோய் குறித்து பொய்யை பரப்புவதில் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் பங்கு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜோ பைடன், “தடுப்பூசிகளை பற்றிய தவறான தகவல்களை எதிர்த்து‌‌ போராடுவதற்கு ஃபேஸ்புக் மற்றும் பிற சமூக வலைத்தள நிறுவனங்கள் போதுமானதாக செயல்படவில்லை. இதன் மூலம் அவர்கள் (சமுக வலைத்தள நிறுவனங்கள்) மக்களை கொல்கிறார்கள்.‌ தடுப்பூசி போடாதவர்கள் மத்தியிலேயே வைரஸ் தொற்று பரவுகிறது” என பதில் அளித்தார்.

ஆனால் ஃபேஸ்புக் நிறுவனம், பொது சுகாதாரத்தை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பற்றிய தவறான தகவல்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

From around the web