இந்தியாவில் கண்டறியப்பட்ட இருமுறை உருமாறிய கொரோனா சுவிட்சர்லாந்திலும் பரவியது

 
இந்தியாவில் கண்டறியப்பட்ட இருமுறை உருமாறிய கொரோனா சுவிட்சர்லாந்திலும் பரவியது

இந்தியாவில் கண்டறியப்பட்ட இருமுறை உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று சுவிட்சர்லாந்துக்கும் பரவியது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா, உருமாற்றம் அடைந்து மேலும் தீவிரம் அடைந்துள்ளது.  இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது. அதே போல் தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்தது.

இந்தியாவிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் இருமுறை உருமாறிய பி.1.617- என்ற புதிய வகை கொரோனா பரவியிருப்பதாக சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே இந்தியாவில் உருமாறிய கொரோனா சுவிட்சர்லாந்து நாட்டில் பரவி உள்ளதாக அந்த நாட்டு பொது சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.

சுவிட்சர்லாந்துக்கு விமானத்தில் வந்த பயணி ஒருவருக்கு  இந்தியாவின் உருமாறிய கொரோனா  இருந்துள்ளது. அவரது ரத்த மாதிரிகளை கடந்த மாதம் சேகரித்து ஆய்வு செய்ததில் அவருக்கு இந்தியாவின் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்ததாக சுவிட்சர்லாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பயணி, ஐரோப்பிய நாடு வழியாக சுவிட்சர்லாந்துக்கு விமானம் மூலமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் பயணிகள் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன. அதுபோன்று சுவிட்சர்லாந்தும் கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தின் பயண தடை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web