இன்னும் சில மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தபோகும் டெல்டா வகை கொரோனா..! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 
WHO

இன்னும் சில மாதங்களில் டெல்டா வகை கொரோனா அனைத்து நாடுகளிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தப் போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதில், டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா வகை கொரோனாவை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு உருமாற்றம் விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் கடந்த 4 வாரங்களில் கொரோனா பாதித்தவர்களில் 75 சதவீதம் பேருக்கு டெல்டா வகை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முதலில் உறுதி செய்யப்பட்ட டெல்டா வகை கொரோனா, தற்போது 124 நாடுகளில் பரவியுள்ளது. கடந்த வாரத்தை விடவும் கூடுதலாக 13 நாடுகளில் டெல்டா வகை கொரோனா தொற்றுப்பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் முதலில் உறுதி செய்யப்பட்ட ஆல்ஃபா வகை 180 நாடுகளிலும், தென் ஆப்பிரிக்காவில் உறுதி செய்யப்பட்ட பீட்டா வகை 130 நாடுகளிலும், பிரேசிலில் உறுதி செய்யப்பட்ட காமா வகை 78 நாடுகளிலும் பரவியுள்ளது. கிழக்கு பசிபிக் பகுதிகளில் 30 சதவீதமும், ஐரோப்பிய பகுதிகளில் 21 சதவீதமும் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web