120 மொழிகளில் தொடர்ந்து பாடி கின்னஸில் இடம் பிடித்த மாணவி..!
துபாயில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த மாணவி ஒருவர், 7.20 மணி நேரத்தில் 29 இந்திய மொழிகள் உட்பட 120 மொழிகளில் தொடர்ந்து பாடி உலக சாதனை படைத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதிஷ், இவருடைய மனைவி சுமித்ரா. இந்தத் தம்பதியின் மகள் சுசேத்தா சதிஷ் (வயது 16). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக துபாயில் வசித்து வருகின்றனர். துபாயில் உள்ள இந்திய பள்ளியில் சுசேத்தா சதிஷ் படிக்கிறார்.
இளம் வயதில் இருந்தே இந்துஸ்தானி, கர்நாடக இசையில் ஆர்வமுடைய சுசேத்தா, கடந்த 2010-ம் ஆண்டு துபாயில் உள்ள இந்திய கலையரங்கில் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் 102 மொழிகளில் பாடி சாதனை படைத்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட மாதம் 19-ம் தேதி, இந்திய தூதரக கலையரங்கில் 122 மொழிகளில் பாடினார். இது, உலக சாதனை புத்தகமான கின்னசில் இடம் பெற்றது.
இதுகுறித்து சுசேத்தா சதிஷ் கூறுகையில், “இளம்வயதில் இருந்தே எந்த மொழி பாடலாக இருந்தாலும் அதைக் கேட்டதும் மனனம் செய்து அதை சுலபமாக பாடுவேன். இதனால் சுலபமாக பாடும் திறமை பெற்றேன். என்னால் தற்போது மலையாளம், தமிழ், ஜெர்மனி, ஜப்பான் உள்பட மொழிகளில் பாட முடியும்.
தற்போது சாதனை முயற்சியாக, 29 இந்திய மொழிகள் உட்பட 120 மொழிகளில் 7 மணி 20 நிமிட நேரம் தொடர்ந்து பாடி உலக சாதனை படைத்துள்ளேன். ஜெர்மனி மொழியில் பாடுவது சற்று கடினமாக இருந்தது. எனினும், தொடர்ந்து முயற்சி செய்து சிறப்பாக பாடி பாராட்டுகளை பெற்றேன்” என்றார்.
மாணவி சுசேத்தா சதிஷ் ‘உலக குழந்தை மேதை’ உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.