அஸ்ட்ரா செனகா தடுப்பூசியால் இங்கிலாந்தில் இன்னொரு துயரம்... 35 வயது இளம் தாய் மரணம்
இங்கிலாந்தில் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட இளம் தாயார் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 35 வயதான ஆல்பா டைலர் தனது முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு ஒருவார காலம் அவருக்கு லேசான தலைவலி இருந்து வந்துள்ளது. திடீரென்று ஏப்ரல் 8-ம் தேதி அவரது உடலின் ஒரு பகுதி மொத்தமாக செயலிழந்து போக, அவசர மருத்துவ உதவிக்குழுவினர் அவரை நரம்பியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைக்கான தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
வலிப்பு நோயின் அறிகுறிகளுடன் காணப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் உடனடியாக ரத்தப் பரிசோதனை எடுத்துள்ளனர். அதில் தடுப்பூசியால் ஏற்படும் ஒருவித பாதிப்பு என்பதை உடனடியாக கண்டறிந்துள்ளனர்.
இது அஸ்ட்ரா செனகா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொள்ளும் 50 வயதுக்கு உட்பட்டவர்களில் 50 ஆயிரம் பேர்களில் ஒருவருக்கு வரும் பாதிப்பு என கூறப்படுகிறது.
ஆல்பா அனுமதிக்கப்பட்ட அதே காலகட்டத்தில் இங்கிலாந்து முழுவதும் இதே பாதிப்பால் 250 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அதில் 50 பேர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏப்ரல் 22-ம் தேதி ஆல்பாவுக்கு மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதுடன், தீவிர பரிசோதனையில் அது ரத்த உறைதல் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான ஆல்பா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆல்பாவின் கணவர் அனிஷ் இதை உறுதி செய்துள்ளதுடன், ஆல்பாவின் மறைவு கண்டிப்பாக மொத்த குடும்பத்திற்கும் ஏற்பட்ட இழப்பு என்றார்.