500 கிலோமீட்டர் நடந்து சென்று குழந்தை பெற்ற வீரத்தாய்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தேசிய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு தலைநகர் டெல்லியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடந்தே புறப்பட்டனர்.
அப்படி புறப்பட்ட நிறைமாத கர்ப்பிணியான ஒரு பெண்மணி 500 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். டெல்லி அருகே மதுராவில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த கலிபாய் அவரது கணவர் ராம்தீன் இருவருக்கும் ஊரடங்கு சட்டத்தால் கட்டிடத் தொழில் பாதியில் நின்று வேலை பறிபோனது.
அவர்களைப் போன்ற வேற்று ஊரைச் சார்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊரை நோக்கி சாரை சாரையாக நடக்கத் தொடங்கியதும், இவர்கள் இருவரும் தங்கள் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளனர்.
கலிபாய் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் வேறு வழி தெரியாமல், மக்களோடு மக்களாகப் புறப்பட்டுள்ளனர். மார்ச் 29ம் தேதி தொடங்கிய அவர்களுடைய பயணத்தில், நடந்தும், இடையிடையே ஐந்து தடவை லாரியில் ஏறியும் மார்ச் 31ம் தேதி சொந்த ஊரை அடைந்துள்ளனர்.
மிகுந்த சோர்வுடன் இருந்த கலிபாய்க்கு பிரசவ வலி ஏற்படவே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சுகப் பிரசவத்தில் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இருவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவர் ராஜ்புத் தெரிவித்துள்ளார். ராமநவமி அன்று பிறந்துள்ளதால் மகனுக்கு ராம் என்று பெயர் வைத்துள்ளனர் கலிபாய், ராம்தீன் தம்பதியினர்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் நடந்தும், லாரியில் ஏறியும் 500 கிலோமீட்டர் பயணம் செய்து, இயற்கையான முறையில் எந்த சிரமமும் இன்றி, சுகப்பிரவசம் மூலம் ஆண்குழந்தையை பெற்றெடுத்த அந்தப் பெண்மணிகலிபாய் வீரத்தாய் தானே!