தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ! அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் சித்தா முறையில் சென்னை ஜவஹர் பொறியியல் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களிலும்,
மற்ற சில மாவட்டங்களிலும் அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் இதுவரை குணமடைந்து வருகின்றனர். இது வரை உயிரிழப்பு எதுவும் கிடையாது என்பது வரவேற்கத் தக்க விஷயமாக பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் இதனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு வருகின்றன என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மருத்துவத்துறை சார்பில், பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முதல்வர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவர்கள் முன்னின்று சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். ஏற்கெனவே தமிழகத்தில் 18 பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனவும் விரைவில் அவை அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.