விஜய் 63… மீண்டும் திருட்டுக் கதைச் சர்ச்சையில் அட்லீ!
சென்னை: இயக்குநர் அட்லீ இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களின் கதைகளுமே சர்ச்சைக்குள்ளாகின. காரணம் இவை மூன்றுமே மற்ற படங்களிலிருந்து உருவப்பட்டதுதான். ராஜா ராணி என்ற அவரது முதல் படம் மௌன ராகம் படத்தின் தழுவலாக இருந்தது.
அடுத்து இயக்கிய தெறி படம், விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. மூன்றாவதாக அவர் இயக்கிய மெர்சல், மூன்று முகம், அபூர்வ சகோதரர்கள் ஆகியவற்றின் கலவையாக அமைந்தது. மெர்சல் படக்குழுவினர் கமல் அலுவலகத்தில் அவருடன் படமெடுத்துக் கொண்டபோதுகூட, பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டர் இருக்குமாறு பார்த்துக் கொண்டார் கமல் ஹாஸன்.
அட்லீயின் கதைத் திருட்டு அட்ராசிட்டி குறித்து ஏகப்பட்ட புகார்கள் வந்ததால், தயாரிப்பாளர் சங்கமே அட்லீயை அழைத்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில் மீண்டும் விஜய்யை வைத்து புதிய படம் இயக்குகிறார் அட்லீ. இந்தப் படம் தொடங்கும் போதே இந்த எந்தப் படத்தின் உருவலோ அல்லது யாருடைய கதையிலிருந்து சுட்டதோ என சமூக வலைத் தளங்களில் பலரும் கிண்டலடித்தனர்.
இந்த நிலையில்தான் விஜய் 63 படக் கதைக்கு சொந்தம் கொண்டாடி புகார் அளித்துள்ளார் குறும்பட இயக்குநர் கேபி செல்வா.
அவர் இதுகுறித்து கூறுகையில், “நான் பெண்கள் கால்பந்து போட்டியை கதைக்களமாக வைத்து 265 பக்கங்கள் கொண்ட கதையை தயார் செய்து வைத்திருந்தேன். இந்தக் கதையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திடம் கூறியிருந்தேன்.
ஆனால், அதற்கிடையே இந்த கதையை அட்லீ இயக்க இருக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக நான் முதன்முறையாக நீதிமன்றத்தை அணுகிய போது எழுத்தாளர்கள் சங்கத்தை அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதற்கு பிறகு அட்லீயின் மேனேஜர் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளர் என்னிடம் பேசினார்கள். அப்போது இதை பெரிதுபடுத்த வேண்டாம். உங்களுடைய படத்தை கைவிட்டு விடுங்கள் என்று கூறினார்கள். அவர்களின் இந்த பேச்சு என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன். அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மனோஜ் குமார் தலைமையிலான கமிட்டி என்னை விசாரித்தது. இறுதியாக நான் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து 6 மாத காலம் கூட ஆகவில்லை. சங்க விதிகளின்படி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து ஆறுமாத காலத்துக்கு பிறகே கதைதிருட்டு புகார் அளிக்க முடியும் என்று கூறி எனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான கடிதத்தையும் என்னிடம் வழங்கினார்கள்.
மீண்டும் நான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன். இதுதொடர்பான வழக்கு 23-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. மேலும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கும் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது,” என்றார்.
ஆக… இந்த ஆண்டு முழுக்க விஜய் 63 படம் பற்றி ஏகப்பட்ட கான்ட்ராவர்சி செய்திகள் காத்திருக்குன்னு சொல்லுங்க!
– வணக்கம் இந்தியா