மொட்டை மாடிகளில் காய்கறிகளை வற்றல், வடாம்! பழங்கால நடைமுறைக்கு திரும்பிய தமிழகப் பெண்கள்!
ஊரடங்கு காரணமாக விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகளை முழுமையாக விற்பனை செய்ய இயலாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதனால் தங்களது தேவைக்கு போக மீதமுள்ள காய்கறிகளை வற்றல் போட்டு விவசாயிகள் பதப்படுத்தி வருகின்றனர். நம் முன்னோர்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நடைமுறையாக இருந்த போதிலும் வேலைப்பளு, பரபரப்பு வாழ்க்கை முறைகளால் இந்த நடைமுறை காணாமல் போயிருந்தது.
ஆனால், தற்போது ஊரடங்கின் காரணமாக நேரடியாக விவசாயிகளே விலைகுறைவாக விற்பதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் காய்கறிகளை வற்றல் போடும் நடைமுறைக்கு திரும்பியுள்ளனர்.
மழைக்காலங்களில் ஏற்படும் காய்கறிகள் தட்டுப்பாடினை சமாளிக்க வெயில் காலங்களில் வற்றலைப் போட்டு சேமித்து வைக்கலாம். பள்ளி பயிலும் மாணவர்கள் முதல் திருமணமான பிள்ளைகள் வரை அனைவரும் வீட்டிலேயே இருப்பதால் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பாரம்பரியத்தை மீட்டெடுத்து வருகின்றனர்.
வெங்காயம், மோர் மிளகாய், புளி மிளகாய், கொத்தவரங்காய் ,கத்தரிக்காய், பாகற்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், மணத்தக்காளி, கோவைக்காய், சுக்காங்காய், பிரண்டை , கிழங்கு என பலவகையான வற்றல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.