மீனாட்சி அம்மன் கோவில் அருகே ராணி மங்கம்மாள் கட்டிய பாதாளச் சிறை?
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் அருகே பாதாளச் சிறை ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கோவில் அருகே வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 30 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கே கருங்கல் தூண் ஒன்று வெளிப்பட்டதால் ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்
தொல்லியல் ஆய்வாளர்களும் வந்து பார்வையிட்டு அது பாதாள சிறையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இந்த இடத்தில் ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலை இருந்ததாகவும் கூறப்படுகிறது. ராணி மங்கம்மாள் மதுரையை 1689 ஆம் ஆண்டு முதல் 1704 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைக்குள்ளே முக்கிய கைதிகளை அடைத்து வைக்க பாதாளச் சிறை அமைத்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இது குறித்து தொல்லியல் துறையினரின் ஆய்வுக்குப் பிறகே முழுமையான தகவல்கள் தெரிய வரும்.