டெக்சாஸில் கார் விபத்து.. 3 இந்தியர்கள் பலி..
டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் மாநகரப் பகுதியில் நடந்த கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்கள்.
டல்லாஸ் மாநகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள ஃப்ரிஸ்கோ நகரில் , நெடுஞ்சாலை எண் 423, டெல் வெப் புலவாட் சாலைகள் சந்திப்பில் இந்த விபத்து நடந்துள்ளது. கருப்பு நிற அகுரா காரில் திவ்யா அவுலா, ராஜா கவினி, பிரேம்நாத் ராமநத்தம் ஆகியோர் இருந்துள்ளனர். காரை திவ்யா ஓட்டிச் சென்றுள்ளார்.
நெடுஞ்சாலை எண் 423 ல் தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த காரை, டெல் வெப் புலவாட் சந்திப்பில் இடது புறம் நோக்கி திருப்ப முயன்றுள்ளார் திவ்யா. அப்போது அதே சாலையில் ஃபோர்ட் எஃப் 150 ட்ரக்கை தெற்கே இருந்து வடக்கு நோக்கி, 17 வயது நிரம்பாத இளைஞர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார்.
இடது புறம் திரும்ப முயன்ற அகுரா கார் மீது ஃபோர்ட் ட்ரக் மோதியதில் திவ்யா(34 ), ராஜா (41), பிரேம்நாத்(42) ஆகியோர் காருக்குள்ளேயே இறந்து விட்டனர். ட்ரக்கை ஓட்டி வந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
ஒரு கார் விபத்தில் மூன்று இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது வடக்கு டெக்சாஸ் பகுதி இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சாலைகள் நேர்த்தியாக இருப்பதால் கார் ஓட்டுவது எளிதாகத் தெரிந்தாலும் , சிறு கவனக்குறைவு அல்லது மற்ற ஓட்டுனர்களின் தவறு கூட உயிர்ப்பலியில் முடிந்து விடுகிறது. Defensive Driving பயிற்சி எடுத்துக் கொள்வது சாலைகளில் கவனமாகச் செல்வதற்கு உதவியாக இருக்கும்.