‘திராவிட மாடல்’ வளர்ச்சிக்கு உதவுவீர்... பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் வேண்டுகோள்

 
MKS

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக உலகளவில் திறமையானவர்களை முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக தமிழ்நாடு அரசு நியமித்தது.

அதில், எஸ்தர் டஃபோலோ, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், ஜீன் டிரீஸ், எஸ். நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுடன் முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த பொருளாதார ஆலோசனைக் கூட்டத்தில், குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு பேசிய முதல்வர், திராவிட மாடல் அடிப்படையில் வளர்ச்சி இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். அனைத்து சமூகங்களையும் உள்ள்டக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் திராவிட மாடல், அந்த நோக்கத்துடனே தமிழ்நாடு வளர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.

பெண்களுக்கு சம உரிமை, பொருளாதார வளர்ச்சி, ஒடுக்கப்பட்டோருக்கு சம உரிமை, வேலை வாய்ப்பு, சமூக நீதி மற்றும் மனிதவள மேம்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஆலோசனைகள் தர வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்கிறோம், கொரோனா காலமாக இல்லாமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பினைக் கூட ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு நாம் நேரில் சந்திப்போம் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

From around the web