வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டோம்; கோவிலில் சத்தியம் செய்து வாக்கு சேகரித்த வேட்பாளர்கள்!!

 
Villupuram

ஊராட்சி மன்றத்தேர்தலில் முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என கோவிலில் சத்தியம் செய்து வாக்கு சேகரித்தனர்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ம் தேதி செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடைபெற்றது.

9 மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிட்ட வேட்பாளர்களில் பலர் வாக்காளர்களுக்கு டிஷ் ஆண்டெனா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், நாள் தோறும் விருப்பப்பட்ட வாக்காளர்களுக்கு இறைச்சி மற்றும் பணம் கொடுத்து வாக்கு சேகரித்தனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த புத்தகரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிட்ட சந்தானன், விஜயகுமார் என்ற இரு வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட எவ்வித பரிசு பொருட்களும் கொடுக்கக்கூடாது என்று முடிவெடுத்து வாக்கு சேகரித்து வந்தனர்.

முதல் கட்டத் தேர்தலின்போது, கிராம மக்கள் முன்னிலையில் அக்கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இரு வேட்பாளர்களும், ‘வாக்காளர்களுக்கு பணம் கொடுக் கமாட்டோம்’ என சத்தியம் செய்து வாக்கு சேகரித்தனர்.

இது குறித்து கிராம மக்களிடம் கேட்டபோது, “இவர்கள் இருவரும் சேர்ந்து வாக்குக்கு பணம் கொடுக்கக் கூடாது என முடிவெடுத்ததை வரவேற்றோம். அதே நேரம் அவர்களில் ஆதரவாளர்கள் யாரும் பணம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக கோவில் முன் அனைவரின் முன்னிலையில் அவர்கள் சத்தியம் செய்தனர். எங்கள் கிராமத்தில் 1,164 வாக்குகளில் 1,075 வாக்குகள் பதிவானது. இதில் வெற்றி பெறுவோர் எங்கள் கிராம வளர்ச்சியை முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

வேட்பாளர்களில் ஒருவரான விஜயகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது, ‘இது ஒன்றும் அதிசயமான செயல்அல்ல. இப்போது நடக்கும் சூழ்நிலையால் இது அதிசய மாக தெரிகிறது. கிராம நன்மைக்காக இப்படி ஒரு முடிவெடுத்தோம். அதில் இருவ ரும் உறுதியாக இருந்தோம்’ என்று முடித்துக்கொண்டார்.

இதே செஞ்சி ஒன்றியத்தில் உள்ள துத்திப்பட்டு கிராமத்தில் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது என்பது குறிப்பிடதக்கது.

From around the web