கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் டிவி, ஃபிரிட்ஜ்! குவிந்த மக்கள் கூட்டம்!!
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் டிவி, பிரிட்ஜ், மிக்சி போன்ற பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டதால் பலர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் .
இன்றைய நிலவரத்தை பொறுத்தவரை பொதுமக்களிடம் இருந்த தடுப்பூசி குறித்த தயக்கம் நன்றாகவே குறைந்துவிட்டது எனலாம். இப்போது பலரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
கொரோனாவை தடுக்க தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு என்று கருதப்படுவதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இப்போதும் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில் நெல்லையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டது. நகராட்சி சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டாலும், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
அதனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் அறக்கட்டளை சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டன.
இதன் காரணமாக ஒரே முகாமில் மதியம் 1 மணி வரை 600-க்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அவர்களுக்கு அறக்கட்டை சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.