மூடநம்பிக்கையின் உச்சம்... இறந்த தாயின் உடலை வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்கள்..!

 
Manaparai

ஜெபம் செய்தால் உயிர்த்தெழுந்து விடுவார் என்ற அதீத நம்பிக்கையில், இறந்த தாயின் உடலை வைத்து 7 நாட்கள் ஜெபம் செய்த மகள்களின் செயல் அனைவரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சொக்கம்பட்டியின் ஊருக்கு வெளியே உள்ள ஒரு வீட்டில், ஓய்வுபெற்ற ஆசிரியை மேரி (வயது 75) என்பவர் திருமணமாகாத தனது மகள்கள் ஜெசிந்தா (வயது 43), ஜெயந்தி (வயது 40) ஆகியோருடன் வசித்து வந்தார்.

கிறிஸ்தவ மதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர்கள், பெரும்பாலான நேரத்தை தங்கள் வீட்டில் ஜெபம் செய்வதிலேயே கழித்து வந்துள்ளனர். மேலும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இவர்களின் வீடு இருந்ததால் ஊர் மக்களும் அவர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துள்ளனர்.

Manaparai

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த மேரியைப் பார்ப்பதற்காக அவருடைய உறவினர் ஒருவர் மேரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, மேரி இறந்து விட்டதும், அவருடைய சடலத்தை வீட்டினுள் கிடத்தி வைத்து மகள்கள் இருவரும் தங்கள் தாயை உயிர்பிப்பதாகக் கூறி ஜெபம் செய்து வருவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து அவர்களிடம் பேசி மேரியின் உடலை அடக்கம் செய்யக் கூறியுள்ளார். ஆனால், சகோதரிகள் இருவரும் அவரைத் திட்டி வெளியே அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர், ஊர் மக்கள் சிலரிடம் கூறியுள்ளார். ஊர் மக்கள், மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Manaparai

மேரியின் வீட்டிற்குச் சென்ற போலீசார் வீட்டின் கதவுகளை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் சகோதரிகள் கதவை திறக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தனர். அதன் பின்னர் போலீசார் உள்ளே சென்றபோது, மேரியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. அவரது உடலின் மீது பைபிள் ஒன்றை வைத்து மகள்கள் இருவரும் ஜெபம் செய்துள்ளதும் தெரிந்தது.

மேரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்ல முயன்றபோது, தங்கள் தாயார் உயிரோடு இருப்பதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்றும் கூறி சகோதரிகள் இருவரும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார், 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினரை வரவழைத்து மேரியின் உடலை சோதித்தபோது, அவர் உயிருடன் இல்லை என உறுதிபடுத்தப்பட்டது. அதனால் அவரது உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சகோதரிகள் இருவரும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Manaparai

ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மேரியின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் இறந்து ஏழு நாட்கள் ஆகியிருக்கலாம் எனத் தெரிவித்தார். ஆனாலும், மேரியின் மகள்கள் இருவரும் மருத்துவர்கள் கூறியதையும் ஏற்க மறுத்து தங்கள் தாய் இறக்கவில்லை; அவர் உயிருடன் வருவார் எனக் கூறி மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், போலீசார் மற்றும் வருவாய்த் துறையினரும் மேரி எவ்வாறு இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.  இரவு 9 மணிக்கு தொடங்கி சுமார் 4 மணிநேர போராட்டத்திற்கு பின்னரே சகோதரிகளிடமிருந்து அவர்களின் தாயாரின் உடல் பிரேத பரிசோதனை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையால் சகோதரிகள் தங்கள் தாயார் உடலை வைத்து ஒரு வார காலமாக ஜெபம் செய்துவந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web