பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னர் முதல்வர் முடிவெடுப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 
Anbil

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. மேலும், ஜூன் 1-ம் தேதி கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து, பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக பிரதமர் மோடி நேற்று கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பின் கருத்துக்களையும் கேட்டபின் 12-ம் வகுப்பு தேர்வு குறித்து இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என அவர் கூறினார்.

மேலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவதில் மாணவ ,மாணவிகளுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவி வருவதாக தெரிவித்த அவர், மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாக கூறினார். மாணவர்களின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டிய சூழல் உள்ளது என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

From around the web