ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி!! அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

 
ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிக அனுமதி!! அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகமாக தாக்கி வருகிறது. கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகம் இருந்தால், அவர்களுக்கு வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகிறது. சிரமமில்லாமல் சுவாசிக்க அவர்களுக்கு ஆக்சிஜன் செயற்கையாக அளிக்க வேண்டியுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அதிகரித்த வண்ணம் இருப்பதால், ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடாக உள்ளது. பல இடங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் நோயாளிகள் இறக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் அடைக்கப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம், எங்களுக்கு அனுமதி வழங்கினால் ஆக்சிஜன் தயாரித்து வழங்க தயாராக இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, இந்த வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஏப். 26) மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, அனைத்து கட்சி தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் ஆலையை திறந்து அங்கு தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடலாமா? என்பது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற  இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ. பன்னீர் செல்வம், விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றனர். திமுக சார்பில் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி கலந்துகொண்டனர். அங்கீகரிக்கப்பட்ட 8 கட்சிகளின் முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். ஆக்சிஜன் உற்பத்தியை தவிர்த்து வேறு எந்த செயல்பாடுகளுக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று திமுக எம்.பி கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் முருகன் ஆதரவு தெரிவித்தார்.

முத்தரசன் கூறும் போது தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை அரசின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு வழங்கக்கூடாது.  மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யலாம் என கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என முதல்வர் பழனிசாமி கூறினார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு தான். நாளுக்கு நாள் கொரோனா அதிகரிக்கிறது, ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது என கூறினார்.

ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு திறக்க தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க முடிவு எடுக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதத்திற்கு தற்காலிகமாக திறக்க அனுமதி அளிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி தேவைப்பட்டால் மீண்டும் கூட்டம் நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு கூறி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்படும் என தமிழக அரசு கூறி உள்ளது.

From around the web