தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி இல்லை!!
தமிழ்நாட்டில் ஜூன் 14-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக கடந்த மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் ஊரடங்கு ஜூன் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு அந்த மாவட்டங்களுக்கான தளர்வுகள், இதர மாவட்டங்களுக்கான தளர்வுகள் என பிரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். பலசரக்கு கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் பொதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல் தேநீர் கடைகள் மற்றும் சலூன்கள் திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை.