உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதிக்கு வரிவிலக்கு வேண்டும்... ஒன்றிய நிதி அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

 
CM-Stalin

உயிர்காக்கும் மருந்துகளின் இறக்குமதிக்கு வரிவிலக்கு வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைகளுக்கு, மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மரபணு நோய் பாதித்த ஒரு நபருக்கு செலுத்த வேண்டிய மருந்தின் விலை ரூ.16 கோடியாக உள்ளது. இதுபோன்ற மருந்துகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதுகெலும்பு தசை செயலிழப்பு பாதிப்புக்கு ஆண்டுக்கு 90 முதல் 100 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய்க்கான மருந்துகளும், சிகிச்சையும் அதிக விலை கொண்டதாக இருப்பதால், இந்நோயால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள கடும் சிரமப்படுகிறார்கள்.

இந்த மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும்போது, சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அண்மையில், ஒரு குழந்தைக்காக இறக்குமதி செய்யப்பட்ட இந்த மருந்து மீதான வரிகளை ஒன்றிய அரசு விலக்கிக் கொண்டது.

எனவே, நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய நிதித்துறை அமைச்சகத்துக்கு உரிய அறிவுறுத்தல்களைத் வழங்கிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

From around the web