தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது - சென்னை வானிலை ஆய்வு மையம்

 
Weather

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் 1.5 கி.மீ. உயரத்திலும், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி 3.1 முதல் 4.5 கி.மீ. உயரம் வரையிலும், கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை 1 கி.மீ. உயரத்திலும் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை 2 நாட்களும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அந்த பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web