பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க கோரிக்கை... சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

 
High-court

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிப்பு என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா நோய்தொற்று பரவலை கருத்தில் கொண்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலம் நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதற்கு பாஜக மற்றும் இந்து முன்னணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவை எதிர்த்து திருவள்ளூரைச் சேர்ந்த இல.கணபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

அதில் கடந்த 30-ம் தேதி, தமிழ்நாடு அரசு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறைந்தபட்சம் 5 பேராவது அனுமதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணை நடத்திய நீதிபதி அமர்வு, கொரோனா காலத்தில் பொதுநலனை கருத்தில் கொண்டே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.

இதனையடுத்து விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும், நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை நிராகரித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

From around the web