ரஜினி மக்கள் மன்றங்கள் கலைப்பு..! அரசியலில் ஈடுபடும் எண்ணத்திற்கு அடியோடு முற்றுப்புள்ளி ரஜினி!!

 
Rajinikanth

ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், போர் வரும் போது களம் காணுவோம் எனவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். எனினும், கட்சி தொடங்கப்படாமல் இருந்தது.

இதனிடையே, ஜனவரியில் கட்சி தொடங்குவது உறுதி என்றும், அதற்கான தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவித்த ரஜினிகாந்த், தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலில் இருந்து விலகும் முடிவை எடுத்து அறிவித்தார். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்போவதாக ரஜினி அறிவித்தார்.

அதுதொடர்பாக பல கேள்விகள் எழுந்த நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, போயஸ்தோட்ட இல்லத்தில் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் பணி என்ன?, எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா இல்லையா என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாக அவர் கூறினார்.

ரஜினியை எதிர்பார்த்து போயஸ் தோட்ட இல்லத்தின் முன் திரண்டிருந்த அவரது ரசிகர்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். தேங்காய் உடைத்தும் பூக்களை தூவியும் உற்சாகமடைந்தனர். ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்க புறப்பட்டுச் சென்றபோது பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இந்த நிலையில், போயஸ்தோட்டத்தில் இருந்து கோடம்பாக்கம் சென்ற ரஜினிகாந்த், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டம் முடிந்த கையோடு ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் , என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன ?என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது .அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.

நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல உதவிகளையும், பல சாதனைகளையும் உருவாக்கினோம்.

காலச் சூழலால் நாம் எண்ணம் சாத்தியப்படவில்லை . வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப் போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு சார் பணிகள் எதுவும் இன்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள். இணை. துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் .மக்கள் நலப் பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள்! வாழ்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த் ” என்று குறிப்பிட்டுள்ளார்

From around the web