அவதூறாக பேசியதால் முன்ஜாமீன் வழங்க முடியாது..!! உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Jul 19, 2021, 23:22 IST
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.
எச்.ராஜா தாக்கல் செய்த மனுவில் 2018-ம் ஆண்டு திருமயத்தில் கோவில் நிகழ்ச்சியில் மேடை அமைப்பது தொடர்பான பிரச்சனையில், உயர்நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் தவறான முறையில் பேசியதற்காகத் தான் ஏற்கெனவே நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஜுலை 23-ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளதால் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்தையும் காவல்துறையையும் மனுதாரர் அவதூறாகப் பேசியுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தார்.