மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்தது.. மின்சாரம் தாக்கி 5 மாடுகள் உயிரிழப்பு

 
Medavakkam

தேங்கி நின்ற மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சென்னையை அடுத்த மேடவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 80). இவர், சொந்தமாக மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மாடுகள் நேற்று மதியம் மேய்ச்சலுக்காக மேடவாக்கம் பாபுநகர் ரவி பிரதான சாலை வழியாக சென்று கொண்டிருந்தன.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அந்த சாலையில் மழைநீர் தேங்கி இருந்தது. அந்த தண்ணீரில் மின்கம்பி அறுந்து கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

கேசவனின் மாடுகள் அந்த தண்ணீரில் கால் வைக்கவும் மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 கன்று குட்டிகள், 3 பசு மாடுகள் என 5 மாடுகள் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தன.

உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேடவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மழைநீரில் செத்து கிடந்த மாடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேடவாக்கம் கால்நடைதுறை டாக்டர் மைதிலி, இறந்த மாடுகளுக்கு உடற்கூறு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், மேடவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சிவபூஷணம் ரவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, மாடுகளின் உரிமையாளருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்ற ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அறுந்து கிடந்த மின்வயரை சரி செய்து அப்பகுதிக்கு விரைந்து மின்சாரம் வழங்கவும் மின்வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கரய்யா (29). இவருக்கு சொந்தமான 3 எருமை மாடுகள் நேற்று மாலை வெங்கடாபுரம் கிராம எல்லையில் உள்ள ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருந்தன.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 எருமை மாடுகளும் மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக செத்தன. இதுபற்றி பென்னாலூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

From around the web