தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டி.!

 
PMK-ADMK

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இணைய வழியில் நடந்தது.

இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி (இன்று), 16-ம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள். விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web