12-ம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு விருப்பத் தேர்வு தேதி அறிவிப்பு

 
School

12-ம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு விருப்பத் தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

சென்னை டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை கடந்த 19-ம் தேதி வெளியிட்டார். அப்போது மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், 12-ம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்தி இல்லாதோருக்கு விருப்பத் தேர்வு ஆகஸ்ட் 6 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை வருமாறு:

2020-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இத்தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12-ம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட அரசாணையின் அடிப்படையில், 2020-2021-ம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், 23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான நாட்களில் (25.07.2021 ஞாயிற்றுக் கிழமை நீங்கலாக) காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் வாயிலாக 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத்தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத்தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்ட நாட்களில் 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வெழுத சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மே 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், 2021 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வினை எழுத தற்போது மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

23.07.2021 முதல் 27.07.2021 வரையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் (தக்கல்) திட்டத்தில் 28.07.2021 அன்று ஆன்-லைனில் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். (சிறப்பு அனுமதிக் கட்டணம் - ரூ.1000/-) அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை றறற.னபந.வn.படிஎ.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும், இவ்விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web