தமிழ்நாட்டில் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன் - புதிய தலைவர் அண்ணாமலை சபதம்

 
Annamalai

தமிழ்நாடு பாஜக தலைவராக இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் பொறுப்பேற்றார் அண்ணாமலை.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாஜகவில் இணைந்த அண்ணாமலை, கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மாநில துணைத் தலைவராக பதவி உயர்வுப்பெற்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார்.
 
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் ஒன்றிய இணையமைச்சராக நியமிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி காலியானது. இந்நிலையில் அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவராக நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார்.

இந்நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள கமலாயத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, ஒன்றிய அமைச்சரும் முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல. கணேசன், சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தலைவராக பொறுப்பேற்று கொண்ட பின் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடைக்கோடி மனிதர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் கட்சி பாஜக. நீட் தேர்வு வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு; கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேவை. என்னை போன்ற விவசாய குடும்பத்தில் பிறந்தவர்கள், எல்.முருகனை போன்ற ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு நீட் தேர்வு வரப்பிரசாதமாக இருக்கிறது. மூலை முடுக்கெல்லாம்  சென்று நீட் தேர்வு நல்லது என்று மக்களிடம் எடுத்து சொல்வோம்.

நீட் தேர்வால் மருத்துவ படிப்புகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது தடுக்கப்பட்டது . ஏழை, எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஒரு வரப்பிரசாதம்.

தமிழ்நாட்டில் பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வேன். பாஜக தலைமை எனக்கு வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன்.

ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் முறைப்படி கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி விநியோகம் செய்ய தனித்தனி முறை பின்பற்றப்படுவதில்லை. மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மட்டுமே தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவது இல்லை. தடுப்பூசி செலுத்தும் வேகம், தடுப்பூசி வீணாவது போன்றவையும் விநியோகத்தின் முக்கிய காரணிகள் ஆகும்.  தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழ்நாடு பாஜக வலியுறுத்தும். மூத்த தலைவர்களை கலந்தாலோசித்தே தமிழ்நாடு பாஜக இனி முக்கிய முடிவுகளை எடுக்கும் என கூறினார்.

From around the web