பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார்!

 
கவிஞர் நா.முத்துக்குமார்: கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் போய்விட்டீரே கவிஞரே!

முத்தான பாடல்கள் புனைந்த முத்துக்குமார்
முக்காலமும் வாழ்வான் அழிவில்லை அவனுக்கு !

மகாகவி பாரதி கவிதையின் நாயகன் அவன்
மண்ணில் வாழ்ந்த காலம் முப்பத்திஒன்பது !

பாட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாதியில் இருபத்தி ஒன்பதில் இயற்கை எய்தினான் !

முத்தாய்ப்பான பாடல்கள் திரைப்படங்களுக்கு எழுதிய
முத்துக்குமார் வாழ்ந்த காலம் நாற்பத்தி ஒன்று !

பனிரெண்டு ஆண்டுக்கு  ஒரு முறை மலரும் குறிஞ்சி
பனிரெண்டு ஆண்டும் தினமும் மலர்வித்தான் குறிஞ்சி !

ஆயிரத்து ஐநூறுக்கு மேல் பாடல்கள் எழுதி
அளப்பரிய உயரம் சிகரம் தொட்டு மகிழ்ந்தான் !

'ஆனந்த யாழை மீட்டுகிறாய் 'என்ற பாடல் ஒலியில்
அற்புதக் கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !

'அழகே  அழகே' பாடல் ஒலிக்கும் இடங்களில்
அன்பான  கவிஞன் முத்துக்குமார் வாழ்கிறான் !

இரண்டு தேசிய விருதுகளை இளமையில் பெற்று
இமாலய சாதனை புரிந்தவன் முத்துக்குமார் !

'தேவதையை கண்டேன் 'பாடலின் மூலம்
தேவதையை காண  வைத்த யுககவிஞன் !

'தெய்வங்கள் எல்லாம் தோற்றுப்போகும் ' பாடலில்
தந்தையின் அன்பை உயர்த்திப் பிடித்தவன் !

தாயில்லாப்  பிள்ளை தறிக்கெட்டுப் போகும்
தரணியில் உள்ள பழமொழியை தகர்த்திட்டவன் !

'சுற்றும் விழி சுடரே 'என்ற பாடலின் மூலம்
சுகமான காதல் நினைவை மலர்வித்தவன் !

காதலர்களின் அலைபேசி ஒலிப்புப் பாடல்
கவிஞன் முத்துக்குமாரின் பாடல்களே அதிகம் !

'மழை அழகா வெயில் அழகா ' பாடலின் மூலம்
மழைக்கு இணையாக வெயிலையும் உயர்த்தியவன் !

குழல் யாழ் என திருவள்ளுவன் வாக்குப்படி
குடும்ப வாழ்வில் இரண்டு குழந்தைக்கு தந்தையானவன் !

ஜீவலட்சுமியின் ஜீவனாக வாழ்ந்தவன் ஜீவன் இழந்து
ஜீவலட்சுமியை சோகத்தில்  நடைப்பிணமாக்கினான் !

தமிழ் மீது இருந்த பற்றில் சிறுபகுதியை
தன் உடல் மீது வைத்து இருக்கலாம் முத்துக்குமார் !

பல்வேறு உதவிகள் பலருக்கும் செய்திருந்தபோதும்
பழகியவர்களிடம் எந்த உதவியும் கேட்காதவன் !

கொடிய தீயுக்கும் உன் பாடல் கேட்க ஆசை வந்து
கோரிக்கை வைத்ததோ இயற்கையிடம் !

சாவே உனக்கு ஒரு சாவு வராதா  ? என
சபித்திடத் தோன்றுகிறது எந்தன் மனம் !

இறப்பே உனக்கு ஒரு இறப்பு  வராதா  ? என
ஏங்கித்  தவிக்கிறது எல்லோர் மனமும் !

பாரதி பட்டுக்கோட்டை கவியரசு கண்ணதாசன்
பாடல்கள் போல முத்துக்குமார் பாடல்களும் நிலைக்கும் !
.
கவியரசு கண்ணதாசன் எழுதிய மரணமில்லை வரிகள்
கவிஞர் முத்துக்குமாருக்கும்  முற்றிலும் பொருந்தும் !

வலிமையான பாடல்கள் எழுதி எளிமையாக வாழ்ந்தவன்
வாழ்ந்த காலம் முடிந்தாலும் பாடல்களால் வாழ்வான் !

உடலால் உலகை விட்டு மறைந்து விட்டபோதும்
பாடல்களால் என்றும் வாழ்வான் முத்துக்குமார் !

- கவிஞர் இரா .இரவி 

From around the web