தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தடுக்க செப்டம்பர் 12-ந் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம்

 
Vaccination

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலையை தடுப்பதற்காக நாளை மறுதினம் (செப்., 12) மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நாளை மறுதினம்  (செப்., 12) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 40 ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ளது.

இந்த மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்க இலக்கு நிர்ணயித்து அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், (கிராம மற்றும் நகர), கல்வித்துறை, யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் இந்த முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

இந்த முகாமின் முக்கிய அம்சங்கள் வருமாறு,

கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் போதிய பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

தடுப்பூசி செலுத்திய பிறகு ஏதாவது பின்விளைவுகள் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ள அனைத்து மையங்களிலும் சிகிச்சை கருவிகள் தயார் நிலையில் வைக்கப்படும்.

சிறப்பு முகாம் பாதுகாப்பான முறையில் நடைபெற கொரோனா நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டுதலை அனைவரும் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் கைகழுவுதல் கட்டாயமாகும். தடுப்பூசி கொடுக்கும் முன் சோப்பைக் கொண்டு கைகழுவுவது அல்லது கிருமி நாசினி உபயோகப்படுத்துவது கட்டாயமாகும்.

பெரியவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்தால் மையங்களில் அனுமதிக்கக் கூடாது. மையங்களில் கூட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி பெறுபவர்களுடன் ஒரு நபர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

பயனாளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரங்களை எடுத்து வரவேண்டும். நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதிகள், தொலை துரப்பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுக்கு ஒட்டிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.

இப்பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அனைத்து மையங்களிலும் போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.

3-வது அலையை தவிர்ப்பதற்காக, கொரோனா நோயிலிருந்து விடுபடவும், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெறவும் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியின் விளைவாக, ஒன்றிய அரசிடமிருந்து போதுமான தடுப்பூசி பெறப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் இந்த மெகா தடுப்பூசி முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

From around the web