9 மாவட்டங்களில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொருத்தவரை 27 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
தொடர்ந்து விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, வாக்குச்சாவடி போன்ற பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,
விடுபட்ட 9 மாவட்டங்களில் 2 கட்டமாக அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதி ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. வேலூர், திருபத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
* நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும்
* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது.
* 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படும்.
* 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம்.
* ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும்.
* காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
* கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.
* ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.
* 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.
* 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.
* உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.