கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து..! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

 
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து..! நேரில் சென்று வழிபாடு நடத்தும் திருநங்கைகள்!

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் கோயில் தேர் திருவிழாவுக்கு கொரோனா பரவல் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூன்றாம் பாலினத்தவர்கள் என்று அழைக்கக்கூடிய திருநங்கைகள் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த்திருவிழாவில் பங்கேற்பது வழக்கம்.

அப்போது கோயில் பூசாரிகளின் மூலம் தாலி கட்டிக்கொண்டு அன்று இரவு முழுவதும் இறைவனை நினைத்து சந்தோஷமாக ஆடி பாடி மகிழ்ந்த பின்னர் காலையில் தங்களது தாலியை துறந்து விதவைகள் கோலத்தோடு செல்லும் ஐதீகம் உள்ளது.

இந்தத் திருவிழாவில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருநங்கைகளும் வருகை தந்து விழாவில் சிறப்பிப்பது வழக்கம்.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களின் பாரம்பரிய திருவிழாவில் பங்கேற்க முடியாத சென்னை மற்றும் சேலத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள், இன்று கூவாகம் கோயிலுக்கு நேரில் வந்து கூத்தாண்டவர் என அழைக்கப்படும் அரவானுக்கு அர்ச்சனை தட்டில் தாலி மஞ்சள் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து வழிபட்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து இறைவனை நினைத்து பெரிய அளவிலான சூடம் ஏற்றி கும்மியடித்தும், தேங்காய் உடைத்தும் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.

கொரோனா பரவல் காரணமாக இன்று நடைபெறக்கூடிய தேர்த்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web